10 ரூபாய் நாணய வதந்திக்கு மத்திய ரிசர்வ் வங்கி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
மத்திய ரிசர்வ் வங்கி கடந்த 2009-ம் ஆண்டு 10 ரூபாய் நாணயங்களை அறிமுகம் செய்தது. 10 ரூபாய் நாணயத்தை கடைகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், பஸ்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவற்றை வாங்க மறுப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில், 10 ரூபாய் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு 14 ஆண்டுகள் ஆகியும் அதன் நம்பகத் தன்மை குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களும், வதந்தியும் பரப்பப்படுகிறது.
இது தொடர்பாக மாவட்ட அளவிலான நாணய மேலாண்மை குழு கூடி விவாதித்தது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி அரசு போக்குவரத்து கழக ஊழியர்களிடம் 10 ரூபாய் நாணயங்களை வாங்குமாறு மாநில அரசு அறிவுறுத்த வேண்டும். மேலும் வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து 10 ரூபாய் நாணயங்களை வாங்க வேண்டும். இதுதொடர்பாக அனைத்து வங்கிகளும் இணைந்து விளம்பரங்கள் வெளியிட வேண்டும். இதை மத்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது. இதன் மூலம் 14 ஆண்டுகளாக தொடரும் 10 ரூபாய் நாணய வதந்திக்கு மத்திய ரிசர்வ் வங்கி முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்று தெரிவித்துள்ளனர்.