ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில், உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக பணியாற்றிய ஓய்வுபெற்ற நீதிபதி எம்.தணிகாசலம் மற்றும் உறுப்பினர்கள், தங்களது பதவி விலகல் கடிதங்களை அரசுக்கு சமர்ப்பித்துள்ளனர்.
இதையடுத்து, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வீ.பாரதிதாசன் நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளான ச.கருத்தையா பாண்டியன், மு.ஜெயராமன், இரா.சுடலைக்கண்ணன், கே.மேக்ராஜ், தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் பெரு.மதியழகன் மற்றும் திருப்பூர் மாவட்டம் கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரி முதல்வர் எஸ்.பி.சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.