மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 1.95 லட்சம் கன அடி உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா, கேரளா மாநிலங்களில் கொட்டும் மழையால் அங்குள்ள அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் கனமழையால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1.80 லட்சம் கன அடியாக நேற்று காலை நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கு 1.95 லட்சம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது.
அணை நிரம்பியுள்ள நிலையில், வரத்தாகும் நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், 11 மாவட்டங்களுக்கு ஏற்கனவே விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் மேட்டூர் அணை நீர்வளத் துறை, வருவாய்த் துறை, காவல்துறை, தீயணைப்பு துறை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தால் மக்களை தங்க வைப்பதற்காக மேட்டூர் திருமண மண்டபத்தில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.