இன்று முதல் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறந்து விடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள 14,707 ஏக்கர் முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலங்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் தண்ணீர் திறப்பதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. கடந்த ஆண்டு மழை குறைந்ததால் நீர்மட்டம் 118.40 அடியாக இருந்தது. இருப்பினும் விவசாயிகளின் கோரிக்கையை முன்வைத்து ஜூன் மாதம் முதல் நாள் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த வருடம் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால் அணையின் நீர்மட்டம் 119 அடியாக உள்ளது. அதன்படி பாசனத்திற்காக நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே இன்று காலை அணையில் இருந்து பாசனத்திற்கு 200 கன அடி, தேனி மாவட்ட குடிநீருக்கு 100 கன அடி என 300 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்