சென்னையில் பதுக்கி வைக்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள 15 பழங்கால சிலைகளை காவல்துறையினர் மீட்டனர்.
சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பழங்கால சிலைகள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஜெயந்த் முரளி தலைமையில் காவல்துறையினர் அந்த இடத்திற்கு மாறுவேடத்தில் சென்றனர்.
அப்போது அந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழங்கால சிலைகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வீட்டு உரிமையாளர் ரமேஷ்பாந்தியாவிடம் அந்த சிலைகளுக்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதனால் 15 சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டது. அம்மன், புத்தர், சிவன், நடராஜர், நந்தி, நர்த்தன விநாயகர், ராமர், லட்சுமணர், சீதை மற்றும் ஆஞ்சநேயர் போன்ற 15 சிலைகளும் ஏதாவது ஒரு கோவிலில் திருடப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும் என்று கருதி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.