பொங்கல் பண்டிக்கைக்காக அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொங்கல் பண்டிகை 2023ம் ஆண்டு ஜன. 14ம் தேதி முதல் 4 நாட்கள் கொண்டாடப்பட உள்ளது. சென்னையில் வசிக்கும் வெளி மாவட்ட, மாநிலங்களை சேர்ந்தவர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக, சென்னை மற்றும் முக்கிய ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள், சாதாரண பேருந்துகள் இயக்கப்படும். அந்தவகையில், பொங்கல் பண்டிகைக்கு 2 நாட்களுக்கு முன்னதாக சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடியவர்களுக்கு நேற்று முதல் அரசு விரைவு பேருந்துகளுக்கு முன்பதிவு தொடங்கியது.
இதுகுறித்து பேசிய போக்குவரத்து துறை அதிகாரி, "பொங்கலுக்கான அரசு விரைவு பேருந்து முன்பதிவுக்கு tnstc.com என்ற இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளலாம். முதலில் அரசு விரைவு பேருந்துகளுக்கும் பின்னர் போக்குவரத்து கழக பேருந்துகளுக்கும் முன்பதிவு செய்யப்படும். மேலும், பொங்கல் சிறப்பு பேருந்துகள் ஜனவரி முதல் வாரத்தில் அறிவிக்கப்படும். இந்தாண்டு பொங்கலுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது" என்று கூறினார்.