ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியாவின் 5 ஜெட் விமானங்களை சுட்டதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' எனும் பெயரில் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் கோட்லி, பஹவல்பூர் மற்றும் முசாபராபாத் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்தியா இத்தாக்குதலின் போது பாகிஸ்தான் ராணுவ தளங்களைத் தாக்கவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இன்று காலை 10 மணிக்கு இந்த நடவடிக்கைகள் குறித்த செய்தியாளர் சந்திப்பை பாதுகாப்பு அமைச்சகம் நடத்தவுள்ளது. இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா சொந்தமான ஐந்து ஜெட் விமானங்களை தாங்கள் சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதில் மூன்று ரஃபேல் விமானங்கள், ஒரு மிக்-29 மற்றும் ஒரு எஸ்யூ-30 போர் விமானம் ஆகியவை அடங்கும் என பாகிஸ்தான் கூறியுள்ளது.