1814 ஆம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்த இராபர்ட்டு கால்டுவெல், தனது 24 ஆம் வயதில், சமயப்பணி மேற்கொள்வதற்காக இந்தியாவிற்கு பயணமானார். அவர் பயணம் செய்து வந்த கப்பல், நடுக்கடலில் புயலில் சிக்கி, மற்றொரு கப்பலோடு மோதி விபத்துக்குள்ளானது. அவரோடு பயணித்த பலரும் உயிர் நீத்தனர். இராபர்ட் கால்டுவெல் மிகவும் சிரமப்பட்டு, இந்தியா வந்தடைந்தார். அதன் பின்னான 53 ஆண்டுகள் சமய பணிக்கும் மேலான தமிழ்ப் பணியையே அவர் செய்தார். கரந்தை இராசாராம் முதலியாரிடம் தமிழ் கற்கத் துவங்கினார். மூன்று ஆண்டுகள் தமிழ் மற்றும் வடமொழியைக் கற்றவர், அதன் பின்பு, தமிழ் மொழியின் அருமையை உலகிற்குப் பறை சாற்றும் பணியில் ஆழ்ந்தார். அவரே தமிழ் மொழியை மறுமலர்ச்சிப் பாதைக்கு இட்டுச் சென்றவர். எனவே அவரைப் பற்றிக் கூறுகையில் தமிழ் ஆர்வலர்கள் பலரும் அவர் தமிழைக் காக்கவே கடலில் இருந்து மீண்டு வந்தார் என்று சிலாகித்துக் கூறுவர்.
வரலாற்று உண்மைகளை ஆராய்ந்து அறிவதில் இராபர்ட்டு கால்டுவெல் நாட்டம் கொண்டார். அகழாய்வுகள் மூலமே வரலாற்று உண்மைகளை ஆவணப்படுத்த முடியும் என்று அவர் உறுதியாக நம்பினார். தன் அகழாய்வுகள் மூலம் தமிழகம் பற்றிய பல வரலாற்று உண்மைகளை முதன் முதலில் உலகிற்கு எடுத்துரைத்தவர் கால்டுவெல் ஆவார். பாண்டிய நாட்டின் பழம் பெரும் துறைமுகங்களாக விளங்கிய கொற்கை, காயல் ஆகியவைப் பற்றிய செய்திகள் அவரை அகழாய்வுகள் செய்யத் தூண்டின. கடற்கரையை ஒட்டிய சிற்றூராக இருந்த அப்பகுதிகளை அகழ்வாராய்ச்சி செய்யும் பணியைத் தன் சொந்தச் செலவில் கால்டுவெல் மேற்கொண்டார். கொற்கை என்று கூறப்படும் சங்ககாலத் துறைமுக நகரம், கடல் மட்டத்திற்கு 8 அடி கீழே அமைந்துள்ளது என்பதைத் தன் ஆய்வுகளின் மூலம் நிறுவினார். இதன் மூலம் இலக்கியங்களில் கூறப்படும் நகரங்கள், பலர் சொல்வது போல வெறும் கற்பனை நகரங்கள் அல்ல என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்தார். மேலும், சமயப் பணிக்காகத் திருநெல்வேலி மாவட்டத்தில் வசித்த அவர், அந்த மாவட்டத்தின் வரலாற்றை ஆராய்ந்து அறிந்து "திருநெல்வேலி சரித்திரம்" எனும் நூலை இயற்றினார். அந்த நூலில் பல பண்டையக் கட்டடங்களைப் பற்றிய குறிப்புகளையும், பாண்டியர் கால நாணயங்களைப் பற்றிய செய்திகளையும் விரித்துரைத்திருக்கிறார்.
இராபர்ட்டு கால்டுவெல் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பயின்றபோது, டேனியல் ஸ்டான்போர்டு என்ற பேராசிரியர் அவருக்கு ஒப்பியல் மொழி ஆய்வில் பெரும் நாட்டத்தை ஏற்படுத்தினார். அந்த உந்துதலில் தென்னிந்திய மொழிகளை ஆய்வு செய்தார். வடமொழிக்கும் தமிழுக்கும் உள்ள வேறுபாட்டை எடுத்துரைத்தார். மேலும், கடல் வாணிபத்தின் வாயிலாகப் பொருட்களை மட்டும் அல்ல, தமிழையும் கடல் கடந்து கொண்டு சேர்த்தனர் தமிழர்கள் என்று அவர் உணர்ந்தார். இந்த உண்மையைத் தன் மொழியியல் ஒப்பாய்வு மூலமாக நிரூபித்தார். உதாரணத்திற்கு, "அரிசி" என்ற பொருள் தமிழர்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்த முதன்மையான பொருளாகும். இதுவே கிரேக்கத்தில் "அருசா" என்று வழங்கிற்று. பின்னர், ஆங்கிலத்தில் "ரைஸ்" என்று மருவிற்று என்று விரித்துரைத்தார். தமிழர் ஏற்றுமதி செய்த பொருட்களுள் மயிலிறகும் ஒன்றாகும். "தோகை" என்ற தமிழ்ப் பெயர் கொண்ட அதுவே, ஹீப்ரூ மொழியில் "துகி" என்று வழங்கலாயிற்று என்று விளக்கினார். மேலும் வாணிபத்திற்கு பயன்பட்ட "காசு" என்பதே "கேஷ்" என்று ஆனது என்பதைச் சான்றுகளோடு எடுத்துரைத்து, தமிழ் மொழியின் பயணத்தை உலகுக்கு மட்டுமல்ல, தமிழர்களுக்கும் உணர்த்தினார். “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்ற நூல் மூலமாக அவர் போட்ட இந்த விதை தான் விருட்சமாக வளர்ந்து, தமிழ் மொழிக்கு பின்னாட்களில் ‘செம்மொழி’ எனும் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது.
தமிழ் மொழிக்கான ஒளியாக மேற்கிலிருந்து உதித்து வந்த கால்டுவெல் என்ற சூரியன், 1891 ஆம் ஆண்டு, தனது 77வது வயதில் கொடைக்கானலில் அஸ்தமனமாயிற்று. தமிழையே நேசித்தும் சுவாசித்தும் வந்த அவரை, இந்த தமிழ் மண் விட மறுத்தது. அவரது உடல், அவர் பணியாற்றிய திருநெல்வேலி மாவட்டம் இடையன்குடியில், அவர் கட்டிய ஆலய வளாகத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. சூரியன் மறைந்தாலும் சூரிய சக்தி உலகைக் காக்கத் தவறாது என்பது போல, அவர் கொடுத்த ஒளியில் தமிழும் தமிழகமும் தலை நிமிர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.