ஊரக சுகாதாரத் திட்டத்தில் தேசிய அளவில் தமிழகம் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் ஜல்சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை மூலம், ஊரகப் பகுதிகளில் உள்ள சுகாதாரத்தின் தரம் மற்றும் சுகாதார உட்கட்டமைப்பில் அடைந்த முன்னேற்றம் ஆகியவற்றை முக்கிய அளவீடுகளாகக் கொண்டு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தரவரிசைப்படுத்தப்படும். அதனடிப்படையில், 2021-22-ல் மேற்கொள்ளப்பட்ட சுகாதாரத்துக்கான மதிப்பீட்டில் தேசிய அளவில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில், தமிழகம் 3-ம் இடத்தைப் பிடித்துள்ளது.
இதற்கான விருது, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவால் வழங்கப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற தூய்மை பாரத விழாவில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், செயலர் பெ.அமுதா ஆகியோர் இவ்விருதைப் பெற்றுக்கொண்டனர். இதுகுறித்து தமிழக அரசு செய்திகுறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) பகுதி I-ன் கீழ், சுமார் 50 லட்சம் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் மற்றும்இடவசதி இல்லாத வீடுகள் பயன்பெறும் வகையில் 413 சமுதாயசுகாதார வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன.
மேலும், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) பகுதி II-ன் கீழ், கூடுதலாக 3.89 லட்சம் குடும்பங்களுக்கு கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தபட்டு வருகின்றன. மேலும், கிராம ஊராட்சிக்கான முழு சுகாதார அடிப்படையில் பல திட்டங்களை ஒருங்கிணைத்து மேற்கொள்ள நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
‘சுஜலாம் 1.0’ எனும் 100 நாள் நீர் மேலாண்மை இயக்கத்தில், வீட்டுத் தோட்டம், தனி நபர் உறிஞ்சுக்குழிகள் மற்றும் சமுதாய உறிஞ்சுக்குழிகள் போன்ற கழிவுநீர் மேலாண்மைப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் ‘சுஜலாம் 1.0’ இயக்கத்தில் தமிழகம் 5-ம் இடம் பெற்றுள்ளது. இதற்கான விருதையும், குடியரசுத் தலைவரிடம் இருந்து அமைச்சர், செயலர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.