இலங்கையின் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வாங்க ரஷ்யா ஆர்வம் காட்டி வருகிறது.
இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் அவரது சொந்த ஊரான அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள மத்தளவில் சர்வதேச விமான நிலையம் கட்ட கடந்த 2009 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த விமான நிலையத்துக்கு மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டு 2013இல் திறந்து வைக்கப்பட்டது. இதன் பரப்பளவு சுமார் 2000 ஏக்கர் ஆகும். சுமார் 1300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது. 3500 மீட்டர் நீளம், 75 மீட்டர் அகலத்தில் ஓடுபாதை உள்ளது. மேலும் 115 அடி உயர கட்டுப்பாடு கோபுரமும் உண்டு. இந்த விமான நிலையம் நஷ்டத்தில் இயங்கி வந்தது.
பின்னர் சிறிசேன ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2015 இல் இந்த விமான நிலையத்தின் சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த விமான நிலையத்தை இந்திய அரசு குத்தகைக்கு எடுக்க 2016 ஆம் ஆண்டிலிருந்து முயற்சி செய்து வந்தது. ஆனால் அதற்கு அந்நாட்டு எதிர்க்கட்சிகள் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் இந்தியாவுடன் கூட்டு சேர்ந்து மத்தள விமான நிலையத்தை வாங்க ரஷ்யா ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வந்துள்ளன. இந்தியாவுக்கு அடுத்தபடியாக இலங்கைக்கு ரஷ்யர்கள் அதிகமாக சுற்றுலா பயணம் மேற்கொள்கின்றனர். வரும் ஆண்டில் 12 லட்சம் ரஷ்யர்கள் இலங்கைக்கு சுற்றுலா செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.