பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்குவா பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டுள்ளார். இதில், பள்ளியில் பணியாற்றி வந்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இருவர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களில் 5 பேர் பள்ளி ஆசிரியர்கள் என்பதும், 3 பேர் பள்ளியில் பணியாற்றி வந்த துணைநிலை ஊழியர்கள் எனவும் தெரியவந்துள்ளது. மேலும், உயிரிழந்த அனைவருமே ஆண்கள் என சொல்லப்பட்டுள்ளது.
பள்ளியில் தேர்வுகள் நடந்து முடிந்த உடன், இந்த துப்பாக்கி சூடு நடைபெற்றதாக கூறப்படுகிறது. இது குறித்து பேசிய மாவட்ட காவல் அதிகாரி முஹம்மது இம்ரான், “வியாழன் மதியம் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. இதில் தாக்கப்பட்டவர்கள் அனைவருமே இஸ்லாத்தின் ஷியா கிளையின் உறுப்பினர்கள் ஆவர். ஏற்கனவே, இந்த பகுதியில் ஷுண்ணி மற்றும் ஷியா பிரிவினருக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்படும். எனவே, இந்த கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது” என்று கூறினார். இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.