தூத்துக்குடியில் கடல் நீர் பச்சை நிறத்தில் மாறியதற்கு பாசிகளே காரணம் என்று கூறப்பட்டுள்ளது.
தூத்துக்குடி பகுதி மக்கள் விடுமுறை நாளான நேற்று காலை முதலே புதிய துறைமுகம் கடற்கரைக்கு குடும்பத்தினருடன் சென்றனர். அப்போது வழக்கத்திற்கு மாறாக கடல் நீர் பச்சை நிறத்தில் காட்சியளித்தது மேலும் கடல் அலைகளின் வேகம் அதிகமாகவும் ஆக்ரோஷமாகவும் காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். மேலும் மீனவர்களும் அச்சம் கொண்டு கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைத்தனர்.
2008 மற்றும் 2009ல் மன்னார் வளைகுடாவில் கடல் நீர் பச்சை நிறமாக மாறியது. அதன் பின் 2019 முதல் தற்போது வரை வருடத்தில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கடல் நீர் பச்சை நிறமாக மாறுகிறது. இதற்கு ‘நாட்டிலுக்கா சின்டிலெம்ஸ்’ என்ற கடற்பாசி காரணம். இந்த பாசியில் சிவப்பு மற்றும் பச்சை நிறங்கள் என இரண்டு வகைகள் உள்ளன. அதில் தற்போது பச்சை நிறத்திலான பாசிகள் அதிக அளவு வந்துள்ளது.
இந்த வகையான கடல் பாசியில் இருந்து அம்மோனியா என்கிற நச்சுத்தன்மை வெளி வருவதுடன், இந்த பாசிகள் வளரக்கூடிய பகுதிகளில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருப்பதால் சில இடங்களில் மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்குகிறது. இந்த பாசிகள் அரபிக்கடல் பகுதியில் பல்லாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உற்பத்தியாகிறது. அரபிக்கடலில் இருந்து நீரோட்டம் காரணமாக இந்த பாசிகள் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு வருவது ஆய்வுகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.