அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி மீண்டும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது செந்தில் பாலாஜி ஜாமீன் மனுக்களை சென்னை ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட் ஆகியவை நிராகரித்த நிலையில் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனை அடுத்து மீண்டும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் அந்த மனுவில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. தனக்கு எதிராக பண பரிமாற்ற வழக்கில் போலி ஆவணங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. மேலும் எனது உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்னிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் செந்தில் பாலாஜி சமர்ப்பித்த மனு மீதான கேள்விகளுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை எட்டாம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.