இந்திய பங்குச் சந்தையில் இன்று புதிய உச்சம் பதிவாகியுள்ளது. இன்றைய வர்த்தக நாளின் தொடக்கம் முதலே ஏற்றம் பெற்று வந்த பங்குச்சந்தை இறுதியில் 1.1% உயர்வை பதிவு செய்துள்ளது. நேற்று மற்றும் இன்றைய தினங்களில் வெளியான தொழில்நுட்ப நிறுவனங்களின் காலாண்டு அறிக்கை பங்குச் சந்தையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 847.27 புள்ளிகள் உயர்ந்து 72568.45 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது. தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 247.35 புள்ளிகள் உயர்ந்து 21894.55 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.இன்றைய வர்த்தகத்தில், இன்போசிஸ், டிசிஎஸ், ஹெச் சி எல் டெக், ரிலையன்ஸ், பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல், விப்ரோ, எல் டி ஐ மைண்ட் ட்ரீ, டெக் மஹிந்திரா போன்ற நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், சிப்லா, அப்பல்லோ ஹாஸ்பிடல், அல்ட்ராடெக் சிமெண்ட், பஜாஜ் பின்சர்வ், பவர் கிரிட், கோல் இந்தியா, ஹெச்டிஎஃப்சி லைப், ஹெச்டிஎஃப்சி வங்கி, என்டிபிசி ஆகியவை சரிவடைந்துள்ளன.