இந்தியாவில் எரிபொருள் சார்ந்த சேவைகளை வழங்கும் நிறுவனமான ஷெல், இன்று பெங்களூரு நகரத்தில் தனது முதல் மின்சார சார்ஜிங் நிலையத்தை தொடங்கியது. இங்கு, இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு மின்சார சார்ஜிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியாவில், இருசக்கர மின்சார வாகனங்களுக்கான தனது முதல் சார்ஜிங் நிலையத்தை ஷெல் நிறுவனம் பெங்களூருவில் அமைத்துள்ளது. மேலும், தனது அனைத்து எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் ஷெல் நிறுவனத்திற்கு சொந்தமாக 330 எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதன் எண்ணிக்கையை 1200 ஆக உயர்த்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. அத்துடன், 2030 ஆம் ஆண்டிற்குள், 10000 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. மேலும், 2025 ஆம் ஆண்டிற்குள் சுமார் 5 லட்சம் சார்ஜிங் போர்டுகளை நிறுவ இலக்கு நிர்ணயித்துள்ளது. அத்துடன், சார்ஜிங் நிலையங்களில் தரப்படும் மின்சாரம், பசுமை எரிசக்தி மூலம் கிடைக்கும் மின்சாரமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய ஷெல் மொபிலிட்டி இந்தியா நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி சஞ்சய் வர்க்கி, "பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ள மின்சார வாகன சார்ஜிங் நிலையத்தின் மூலம், நாங்கள் புதிய வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளோம். உலக அளவில், மின்சார வாகனச் சந்தை அதிகரித்து வருவதால், லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு எங்களது சேவையை விரிவாக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது" என்று கூறினார். மேலும், பெங்களூருவில் உள்ள ஷெல் எரிபொருள் நிரப்பும் மையங்களில், விரைவில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். அத்துடன், இந்தியாவின் பிற நகரங்களில் உள்ள எரிபொருள் நிரப்பும் மையங்களில், படிப்படியாக இந்த சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணி விரிவுபடுத்தப்படும் என்று அறிவித்தார்.