செல்போன்களில், இருப்பிடத்தை கண்காணிக்கும் வகையில், நேவிகேஷன் சிஸ்டம்கள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக அமெரிக்காவின் ஜிபிஎஸ் சிஸ்டம் பெரும்பான்மையாகப் பயன்படுத்தப்படுகிறது. தற்போது, இந்தியாவின் சுய நேவிகேஷன் சிஸ்டமான NavIC யை ஜிபிஎஸ் க்கு மாற்றாகப் பயன்படுத்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, செல்போன் உற்பத்தி நிறுவனங்களுக்கு, NavIC செயல்படுத்த இந்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய பகுதிகளுக்கான நேவிகேஷன் சாட்டிலைட் அமைப்பை இஸ்ரோ கடந்த 2013 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது. NavIC என்று பெயரிடப்பட்ட இந்த தொழில்நுட்பம், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது என்பதால், நேவிகேஷன் சார்ந்த தொழில்நுட்ப தேவைகளுக்கு, இந்தியா வெளிநாடுகளைச் சார்ந்து இருந்த நிலைமை நீக்கப்பட்டது. எனினும், தற்போதைய நிலையில், பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான செல்போன் சாதனங்களில், NavIC அம்சம் இல்லை. அமெரிக்காவின் ஜிபிஎஸ் சிஸ்டம் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. எனவே, செல்போன்களை NavIC அம்சம் செயல்பாட்டிற்காகத் தயார் செய்யும் படி, செல்போன் உற்பத்தி நிறுவனங்களுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நேவிகேஷன் சிஸ்டத்தை பயன்படுத்துவதால் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்று நம்பப்படுகிறது. எனவே, இந்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. ஏற்கனவே, சீனா, ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளில் அந்தந்த சொந்த நாட்டில் உருவாக்கப்பட்ட நேவிகேஷன் சிஸ்டம்கள் பயன்பாட்டில் உள்ளன. எனவே, இந்தியாவும் இதில் களமிறங்க உள்ளது. அதன்படி, வரும் ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் செல்போன்களில் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்துடன் சேர்த்து NavIC தொழில்நுட்பமும் பொருத்தப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஆனால், இந்த நேவிகேஷன் சிஸ்டத்தை செல்போன்களில் உருவாக்க, உற்பத்தி செலவு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் கலக்கமடைந்துள்ளன. எனினும் சீனா, ரஷ்யா, ஜப்பான் நாடுகளில் இதனை செயல்படுத்தியது போலவே, இந்தியாவிலும் இந்த தொழில்நுட்ப அம்சத்தை செல்போன் நிறுவனங்கள் செயல்படுத்தும் என்று நம்பப்படுகிறது.