பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள், இந்தியாவின் சட்டதிட்டத்திற்கு உட்பட்டு இயங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பயனாளர்களின் புகார்கள் மீதான நடவடிக்கையை உறுதி செய்ய மேல்முறையீட்டு தீர்ப்பாயங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அனைத்து தரப்பினரைப் பற்றியும் பதிவுகள் பதிவாகின்றன. இ௫ப்பினும் சில சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்க பயனர்கள் முறையிட்டாலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை என்று சமீபத்தில் அதிகமாக புகார் எழுந்துள்ளது.
இதை கருத்தில் கொண்டு இந்திய அரசாங்கமானது சமூக ஊடக நிறுவனங்களுக்குப் பொருந்தும் தகவல் தொழில்நுட்ப (ஐடி) விதிகளில் திருத்தங்கள் தொடர்பான அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.
அதன்படி மேற்குறிப்பிட்ட அனைத்து சமூக ஊடகங்களும் இந்திய அரசியல் அமைப்பின் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 28 முதல் நடைமுறைக்கு வந்துள்ள திருத்தப்பட்ட விதிகளின் கீழ், பயனர்களின் புகார்களைக் கேட்க அரசு குழு ஒன்று அமைக்கப்படும் எனவும், சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் 24 மணி நேரத்திற்குள் பயனர்களிடமிருந்து புகார்களை பெற்றுக் கொள்ள வேண்டும். தகவல் அகற்றுதல் கோரிக்கையை 15 நாட்கள் அல்லது 72 மணி நேரத்திற்குள் அவற்றை தீர்க்க வேண்டும் என்றும் அந்த ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சமூக ஊடகங்கள் எடுத்த நடவடிக்கை பயண௫க்கை திருப்தி அளிக்காத பட்சத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்ய மேல்முறையீட்டுக் குழுக்களை அமைக்கும் விதிகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த மேல்முறையீட்டுக் குழுவானது மூன்று உறுப்பினர்களைக் கொண்டு 3 மாதங்களில் அமைக்கப்படும் என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.