எல் நினோ விளைவு காரணமாக, உலகின் பல்வேறு பகுதிகளில் பருவநிலை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில், சோமாலியா நாட்டில் கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் குறைந்த பட்சம் 96 பேர் உயிரிழந்திருக்கலாம் என அந்நாட்டின் அமைச்சரவை தெரிவித்துள்ளது.
சோமாலியாவில் உள்ள ஷாபெல்லே ஆறு வெள்ளப்பெருக்கால் கரைகளை உடைத்து, கரைபுரண்டோடி வருகிறது. இதனால், பொதுமக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் மேடான பகுதிகளுக்கும், எத்தியோப்பியாவை ஒட்டிய எல்லைப் பகுதிகளுக்கும் சென்று தஞ்சம் புகுந்துள்ளனர். சோமாலியாவில், எல் நினோ காரணமாக அக்டோபர் மாதம் முதல் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தொடர்ந்து, கென்யா, எத்தியோப்பியா, சோமாலியா ஆகிய நாடுகளில் அதிக மழை பொழிந்து வருகிறது. இது மிகவும் அரிதான நிகழ்வாக சொல்லப்பட்டுள்ளது.