சர்வதேச விண்வெளி நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சூயஸ் ஆய்வு கலத்தில் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அதில் இருந்து குளிரூட்டும் பொருள் அதிக அளவில் கசிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ரோஸ்காஸ்மோஸ் மற்றும் அமெரிக்காவின் நாசா ஆகிய விண்வெளி ஆராய்ச்சி நிலையங்கள் இணைந்து இந்த தகவலை தெரிவித்துள்ளன.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள 2 ரஷ்ய விண்வெளி வீரர்கள் மற்றும் ஒரு அமெரிக்க விண்வெளி வீரர் ஆகியோரை பூமிக்கு அழைத்து வருவதற்கா, சூயஸ் விண்கலம், விண்வெளி நிலையத்துடன் பொருத்தப்பட்டுள்ளது. இதில் கசிவு ஏற்பட்டுள்ள சூழலில், இதே கலத்தில், வீரர்களை பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அது குறித்து இரு நாட்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்களும் பகுப்பாய்வு செய்து வருகின்றனர்.
குளிரூட்டும் பொருள் கசிந்துள்ளதால், இந்த விண்கலம் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் பொழுது ஏற்படும் அதிக உராய்வு வெப்பத்தை தாக்குப் பிடிக்காது என்று கருதப்படுகிறது. எனவே, மார்ச் மாதம் அனுப்பப்படுவதாக இருந்த மற்றொரு சூயஸ் ஆய்வு கலம், ஆளில்லாமல் அனுப்பப்பட்டு அதில் வீரர்களை அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளது.