உணவுப் பற்றாக்குறை பற்றிய பதிவின் காரணமாக இலங்கை அரசாங்கம் அதிகாரிகளுக்கு சமூக ஊடகங்ளை பயன்படுத்த தடை விதித்துள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் உணவுப் பற்றாக்குறையால் மயக்கமடைந்துள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்து சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட வேண்டாம் என இலங்கை அரசாங்கம் அரசு ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இலங்கை மக்கள் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் தத்தளிக்கின்றனர். இந்நிலையில் நாட்டின் சுகாதார அதிகாரிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்களின் கூற்றுப்படி, பள்ளிகளில் உணவு பற்றாக்குறை காரணமாக டஜன் கணக்கான மாணவர்கள் மயக்கமடைந்துள்ளதாக தகவல் வெளியானது. இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் சமூக ஊடகங்களில் கருத்துகளை வெளிப்படுத்துவது சர்ச்சையை ஏற்படுத்தும். ஆதலால் இது குறித்து சமூக ஊடகங்களில் எந்த பதிவையும் பதிவிடக்௯டாது என அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே இலங்கையில் பொது நிர்வாகம் மற்றும் மேலாண்மை அமைச்சகம் மற்றும் இதர அரசு ஊழியர்களுக்கு செய்தியாளர்களிடம் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த தடை தற்போது சமூக ஊடகப் பதிவுகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய அந்நாட்டின் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாகவும், பொது சுகாதார ஊழியர்கள் இந்த நிலைமையை பெரிதுபடுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். அத்துடன் உணவுப் பற்றாக்குறையால் மயக்கமடையவில்லை என்று கூறினார். ஆனால் உலக உணவுத் திட்டம் தனது சமீபத்திய அறிக்கையில், ஆறு மில்லியன் மக்கள் வசிக்கும் இலங்கையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் உணவின்றி தவிக்கின்றனர் என்று கூறியுள்ளது. இதற்கிடையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கே, இதை காரணமாக வைத்து அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபடுபவர்களை ஒடுக்கி, கலவரத்தைத் தடை செய்துள்ளார்.