ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கையகப்படுத்தியதில் இருந்து, நிறுவனத்தில் அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அந்த வகையில், ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த இந்தியர் பாரக் அகர்வால் வெளியேற்றப்பட்டார். ஆனால், உடனேயே மற்றொரு இந்தியரான ஸ்ரீராம் கிருஷ்ணன் ட்விட்டரில் இணைந்துள்ளார். எலான் மஸ்க், ஏற்கனவே, குறிப்பிட்ட சில நண்பர்கள் மற்றும் நம்பகமான நபர்களுடன் இணைந்து பணியாற்றி வந்தார். அவர்களில் ஒருவராக ஸ்ரீராம் கிருஷ்ணன் அறியப்படுகிறார்.
ஸ்ரீராம் கிருஷ்ணன், ட்விட்டர் நிறுவனத்தின் கையகப்படுத்துதல் நடவடிக்கையில் ஏற்கனவே எலான் மஸ்க்கிற்கு உதவி செய்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய அமெரிக்கரான ஸ்ரீராம் கிருஷ்ணன், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் ட்விட்டர் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகராக பணி செய்ய உள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவர் பதிவிட்டுள்ளார். மேலும், எலான் மஸ்க் தலைமையில், ட்விட்டர் நிறுவனம் சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறியுள்ளார். அத்துடன், அவர் தற்காலிகமாக எலான் மஸ்க்கிற்கு ஆலோசனைகள் வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். ஏ 16 இசட் என்ற நிறுவனத்தில் முழு நேரப் பணியில் தொடர்ந்து நீடித்து வருவதாக கூறியுள்ளார்.