புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரியில் உருமாறிய கொரோனா வைரசை கண்டறிய அதிநவீன ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
உருமாறிய கொரோனா வைரஸ் வகையை கண்டறிய புதுச்சேரியில் ஆய்வகங்கள் இல்லை. இதனால், கொரோனா பாதித்தவர்களின் மாதிரிகள் ஹைதராபாத் அல்லது புனேவில் உள்ள ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டு வருவதால் முடிவுகள் பெறுவதில் தாமதமாகிறது. இதையடுத்து, முதல்வர் ரங்கசாமி உத்தரவின் பேரில், இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரியில் ரூ.3.5 கோடி மதிப்பில் உருமாறிய கொரோனா வைரசை கண்டறியும் அதிநவீன கருவிகளுடன் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலுவிடம் கேட்டபோது, மரபணு உருமாறும் கொரோனா நுண்கிருமியைத் துல்லியமாகக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ் ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ள முடியும். இதற்காக மருத்துவர்கள், தொழில்நுட்ப ஊழியர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.