பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் 12-ந்தேதி அன்று இரண்டு விசைப்படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்டனர். இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது கடந்த ஒரு மாதத்திற்குள் நடந்த 3-வது சம்பவமாகும். ஆனால் அடிக்கடி நிகழும் இது போன்ற சம்பவங்கள் ஏழை மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து அவர்களின் மனதில் அச்ச உணர்வை உருவாக்குகின்றன.
ஏற்கனவே இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன். வெளியுறவுத்துறை அமைச்சரும் இந்த விவகாரத்தை இலங்கை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், இருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 16 மீனவர்களையும், 102 மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாடு மீனவர்களின் 102 மீன்பிடிப்படகுகள் இலங்கை வசம் உள்ளது. இலங்கையால் விடுவிக்கப்பட்ட 6 மீன் பிடி படகுகள் இன்னும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவில்லை. எனவே இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட 16 மீனவர்களையும், 102 மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவித்திட தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.