மாண்டஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகவே நீடித்து வந்த நிலையில் தற்போது புயலாக வலுவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், மாண்டஸ் புயல் நேற்று மாலை நிலவரப்படி சென்னைக்கு தென் கிழக்கில், 700 கி.மீ., துாரத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த புயல் மணிக்கு, 10 கி.மீ., வேகத்தில் தமிழக வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி கடற்பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது.
மாண்டஸ் புயலானது, புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே நாளை இரவு முதல் நாளை மறுதினம் காலை வரையில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. அப்போது மணிக்கு 85 முதல் 100 கி.மீ., வேகத்துக்கு மேல் சூறாவளி வீச வாய்ப்புள்ளது.
புயல் கரையைக் கடக்கும் முன், காற்று மற்றும் கன மழையால் அதிகமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்கேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு துறைகளுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.