பாகிஸ்தானில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 20 பேர் பலியாகினர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணம் மாலிகேல் பகுதியில் ராணுவ சோதனைச்சாவடியில் ஒரு வாகனம் மோதியதைத் தொடர்ந்து, அதில் பொருத்தப்பட்ட வெடிகுண்டை தற்கொலைப்படை வெடிக்கச் செய்தது. இதில் 12 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். பலருக்கு படுகாயம் ஏற்பட்டது. பின், ஆப்கானிஸ்தானின் எல்லையில் நடந்த மற்றொரு மோதலில் 8 பேர் கொல்லப்பட்டதில், உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது. கைபர் பக்துங்க்வாவின் பன்னு பகுதியில், ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் தலிபான் ஹபீஸ் குல் பகதூர் குழு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்து, எல்லை பகுதிகளில் கண்காணிப்பை அதிகரிக்க உத்தரவிட்டார்.