அக்டோபர் மாத தொடக்கத்தில் சூரியனில் இரண்டு சக்தி வாய்ந்த வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதில் அக்டோபர் 1 ஆம் தேதி நிகழ்ந்த வெடிப்பு, X 7.1 அளவில், மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது. சோலார் சைக்கிள் 25 இன் இரண்டாவது வலுவான வெடிப்பாக இது தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வெடிப்பால் மேற்கு அரைக்கோளம் மற்றும் ஆசியா-பசிபிக் பகுதிகளில் ரேடியோ தொடர்புகள் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில், வெடிப்பின் போது சூரியனில் இருந்து வெளியேறிய பெரிய அளவிலான ஆற்றல் துகள்கள் அக்டோபர் 4ஆம் தேதி பூமியை வந்தடைய வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த ஆற்றல் துகள்கள் பூமியின் காந்தப்புலத்தை பாதித்து, புவி காந்தப்புயலை ஏற்படுத்தும் எனவும், ஆரோராக்கள் தென்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அத்துடன், மின்சாரம், செயற்கைக்கோள் தொடர்பு மற்றும் வழிநடத்தல் அமைப்புகள் பாதிக்கப்படலாம் என்று கூறியுள்ளனர்.