தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கடந்தாண்டு அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் பேரணி நடத்த தமிழ்நாடு காவல்துறையால் அனுமதி மறுக்கப்பட்டது. நீதிமன்றத்தை ஆர்எஸ்எஸ் அமைப்பு நாடிய நிலையில் 6 இடங்களைத் தவிர 44 இடங்களில் பாதுகாப்போடு உள்அரங்கு கூட்டமாக நடத்துவதற்கு உயர் நீதிமன்ற தனி நீதிபதி அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ராமசுப்பிரமணியன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணை நடந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
மேற்கண்ட வழக்கில் இன்று நீதிபதி ராமசுப்பிரமணியன் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கப்படுகிறது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்த தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.