ஜல்லிக்கட்டு போட்டிகளை காண வருமாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீதான வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில், ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் உணர்வு மற்றும் பண்பாட்டுடன் கலந்துவிட்ட ஒன்று. கடந்த 2017 முதல் 2022 வரை ஜல்லிக்கட்டு விதி மீறல் தொடர்பாக எந்தவொரு புகாரும் இல்லை. ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை செய்யக் கோர பீட்டா அமைப்புக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறப்பட்டது.
அப்போது நீதிபதிகள், ஜல்லிக்கட்டு போட்டி எவ்வாறு நடத்தப்படுகிறது என்பது குறித்து பல கேள்விகளை எழுப்பினர். அப்போது தமிழக அரசு, தமிழகத்தில் எவ்வாறு பாதுகாப்பாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்படுகிறது என்பதை காண உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நேரில் வர வேண்டும் என அழைப்பு விடுத்தது. அதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை வரும் டிச.6-க்கு தள்ளி வைத்துள்ளனர்.