பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளான கபடி, சிலம்பம் ஆகியவற்றுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னையில் சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் வீரர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், " உலகமே வியந்து பார்க்கும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்திக்காட்டப்பட்டது. அடுத்தப்படியாக டென்னிஸ் போட்டி நடத்த தயாராகிவிட்டோம்.
இந்த ஆர்வத்தை இன்னும் தூண்டும் வகையில், தமிழக அரசின் பெரு முயற்சியால் கொண்டு வரப்பட்டுள்ள சென்னை உலக மகளிர் டென்னிஸ் போட்டிகள் இன்று தொடங்கி வரும் 18-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
முன்பே நான் கூறியபடி, நம்முடைய பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளான கபடி, சிலம்பம் ஆகியவற்றுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டிகளுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. மற்ற போட்டிகளுக்கான முன்பதிவும் படிப்படியாக தொடங்கவிருக்கிறது. வரும் அக்டோபர் மாதம் முதல் இந்த போட்டிகள் மாவட்டங்களில் நடைபெறும். மாநில அளவிலான இறுதிப்போட்டிகள் பிரம்மாண்டமான வகையில், வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சென்னையில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் முதல் அடுத்த 6 மாதத்துக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பல்வேறு போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல்முறையாக இந்த போட்டிகள், பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் நடைபெறவுள்ளது. இருபாலாரும் பங்கேற்கும் வகையில் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன.
அடுத்த ஆண்டிலிருந்து ஜூன் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கி, பொங்கல் வரை நடக்கும். தமிழர் திருநாளாம் தைத்திருநாள் கலையும் பண்பாடும் மட்டுமின்றி, தமிழர்களின் விளையாட்டுகளும் கொண்டாடப்படும் திருநாளாக அது அமையும்" என்று அவர் கூறினார்.