மாநில அரசுகளின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசால் கடந்த 2009-ம் ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தத் திட்டம் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின்கீழ் 23.07.2009 முதல் 31.08.2022 வரை 1,19,10,653 பயனாளிகள் 10,835 கோடி ரூபாய் காப்பீட்டு தொகையில் பயனடைந்துள்ளனர். இதில் 1513 சிகிக்சை முறைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 8 சிறப்பு உயர் சிகிச்சை முறைகளும், 52 முழுமையான பரிசோதனை முறைகளும் 11 தொடர் சிகிச்சை முறைகளும் அடங்கும்.
இத்திட்டத்திற்காக 1733 மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைத்து வயதினருக்கும் இதயம், நரம்பு, சிறுநீரக நோய்கள், சார்ந்த அறுவை சிகிச்சைகளை பெறலாம்.