கொரோனா பெருந்தொற்றின் போது, வெளிநாட்டில் பணி செய்து வந்த பல தமிழர்கள் வேலை இழந்தனர். அவ்வாறு வேலை இழந்து நாடு திரும்பிய தமிழர்களுக்கு, தொழில் தொடங்கும் புதிய வாய்ப்பை அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வெளிநாட்டில் குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்து, கொரோனா காரணமாக வேலை இழந்து திரும்பிய தமிழர்களுக்கு, மானியத்துடன் இணைந்த கடன் உதவி வழங்கப்படுகிறது. இந்த தகவல் கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2020 ஜனவரி 1ம் தேதி அல்லது அதற்குப் பின் தமிழ்நாடு திரும்பியவர்களுக்கு இந்த உதவி வழங்கப்படுகிறது. அவர்கள் வியாபாரம் அல்லது சேவை சார்ந்த தொழில்களில் ஈடுபட 5 லட்சம் ரூபாயும், உற்பத்தி சார்ந்த தொழில்களில் ஈடுபட 15 லட்சம் ரூபாயும் உதவி வழங்கப்படுகிறது. அதே வேளையில், சொந்த முதலீடாக பொதுப்பிரிவினர் 10% மற்றும் சிறப்பு பிரிவினர் 5% தொகையை செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், “25% அல்லது 2.5 லட்சம் ரூபாய் மதிப்பில் மானியம் வழங்கப்படும். மானியத் தொகை வைப்பு நிதியாக சேமிக்கப்பட்டு, கடன் தொகை ஈடு செய்யப்படும்” என கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் சார்ந்த விவரங்கள் www.msmeonline.tn.gov.in என்ற தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.