சென்னை டி.பி.ஐ வளாகத்தில் 3-வது நாளாக போராட்டம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்துள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் ஆசிரியர்கள் கடந்த சில ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 27-ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி இருக்கின்றனர். அவர்களிடம் தொடக்கக்கல்வி இயக்குனர் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காக்கர் லா உஷா, போராட்டம் நடத்தும் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அதன்படி சங்கத்தின் பொதுச்செயலாளர் ராபர்ட் தலைமையில் 8 பேர் கொண்ட குழுவினர் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளருடன் பேச்சுவார்தை நடத்தி வருகின்றனர்.