பாஜக எம் பி யும், இந்திய மல்யுத்த அமைப்பின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீரர் வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், நேற்று மல்யுத்த வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரது இல்லத்தில் நடந்த பேச்சு வார்த்தையில், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் கலந்து கொண்டனர். அதன் பிறகு, செய்தியாளர்களை சந்தித்த வீரர்கள், ஜூன் 15ஆம் தேதி வரை போராட்டத்தை நிறுத்தி வைப்பதாக தெரிவித்துள்ளனர்.
மல்யுத்த வீரர்கள், செய்தியாளர்களிடம் கூறியதாவது: “பிரிஜ் பூஷன் மீதான காவல்துறையினரின் விசாரணைக்கு ஜூன் 15ஆம் தேதி வரை அவகாசம் கோரப்பட்டுள்ளது. மேலும், அதுநாள் வரை எங்கள் போராட்டத்தை நிறுத்தி வைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 15ஆம் தேதி வரை போராட்டத்தை நிறுத்தி வைக்க திட்டமிட்டுள்ளோம். அதே வேளையில், ஜூன் 15ஆம் தேதிக்குள், அரசாங்க தரப்பில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், போராட்டம் மீண்டும் தொடரப்படும். அத்துடன், எங்கள் மீது பதியப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வலியுறுத்தி உள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர்.