இந்தியாவில் முதன்முறையாக தனியார் காடுகளை வனத்துறை விலைக்கு வாங்கியுள்ளது.
வனத்துறை தேனி மாவட்டம் மேகமலை புலிகள் காப்பகம் வனப்பகுதிகளில் உள்ள 30.41 ஏக்கர் தனியார் பட்டா காடுகளை ரூபாய் 2.33 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது. இந்தியாவில் மாநில அரசு இது போன்று விலைக்கு வாங்குவது இதுவே முதல்முறை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர் . கடந்த 2021 இல் ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பகம் தமிழகத்தின் ஐந்தாவது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் 51 ஆவது புலிகள் காப்பகம் ஆகவும் இது உள்ளது. இங்கு மேகமலை பகுதியில் ஜமீன்களுக்கு சொந்தமான நிலங்கள் பட்டாக்காடுகளாகவும் அதில் தனியார் ஏலக்காய் காபி சாகுபடியும் செய்து வருகின்றனர். இங்கு பாதை வசதி இல்லாதது, வன உயிரிகளின் நடமாட்டம் போன்ற காரணங்களால் பலர் காடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது இந்நிலையில் வனத்துறை அதிகாரிகள் மலைப்பகுதியில் அடர் வனப்பகுதிக்குள் இருந்த 30.41 ஏக்கர் தனியார் பட்டா காடுகளை உரிமையாளர்களிடமிருந்து விலைக்கு பேசி வாங்கியுள்ளனர். இந்த காடுகளை 7 பேரிடமிருந்து ரூபாய் 2.33 கோடிக்கு வனத்துறை விலைக்கு வாங்கியுள்ளது.