ஹிஸ்புல்லா படையினர் இஸ்ரேலுடன் போரில் ஈடுபட்டால் அந்த நாடு கற்காலத்திற்கு செல்லும் வகையில் பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சர் கலாண்ட் எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவா கலாண்ட் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடையே பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
இஸ்ரேல் லெபனான் இடையே உள்ள எல்லை பதற்றத்துக்கு அரசியல் ரீதியில் தீர்வு காண எங்கள் அரசு விரும்புகிறது. நாங்கள் போரை விரும்பவில்லை. என்றபோதிலும் எத்தகைய சூழ்நிலையையும் சந்திக்க தயாராக இருக்கிறோம்.ஹிஸ்புல்லாக்கள் எங்களுடன் போர் செய்தால் லெபனானை கற்காலத்திற்கு அனுப்பும் அளவிற்கு அழிவை ஏற்படுத்தும் சக்தி படைத்தது இஸ்ரேல் ராணுவம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
ஹமாசுடன் இஸ்ரேல் போர் தொடங்கியதில் இருந்தே ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா குழுக்கள் செயல்பட்டு வருகின்றனர். அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதற்கு பதிலடி கொடுத்து வருகிறது இஸ்ரேல் ராணுவம். இது எப்பொழுது வேண்டுமானாலும் போராக மாறும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. அப்படி போர் ஏற்பட்டால் அது பெரும் அழிவை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அஞ்சுகின்றன. இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இவ்வாறு பேசியுள்ளார்.