பாராளுமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் பயன்படுத்தும் விளம்பர பேனர்களில் அச்சகம் மற்றும் வெளியீட்டாளர் பெயர்கள் இடம் பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள், விளம்பரப் பலகைகள், பேனர்கள் சுவரொட்டிகள் போன்றவற்றின் மூலம் விளம்பரம் செய்து வருகின்றனர். ஆனால் இவற்றை அச்சிட்ட அச்சகத்தின் பெயரோ வெளியீட்டாளர்கள் பெயரோ இடம்பெறுவதில்லை என புகார் எழுந்தது. இது பற்றி ஆலோசனை நடத்திய கமிஷன் குழு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 127 வது பிரிவின்படி விளம்பர பலகைகள், பேனர்கள் சுவரொட்டிகள் போன்றவற்றில் அச்சகம் மற்றும் வெளியிட்டவர்களின் பெயர் கட்டாயம் இடம்பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக இருந்தால் அதற்கான பொறுப்பை சுமத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளம்பரங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரம் பெற்றவரின் ஒப்புதலுக்கு பிறகு விளம்பரங்கள் வெளியிடப்பட வேண்டும் எனவும், அரசு செலவில் ஆட்சியில் உள்ள கட்சிக்கு ஆதரவான விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.