காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் 'மோடி பெயர்' குறித்த அவதூறு வழக்கில் அவர் மீதான தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது.
ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த வழக்கை பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
மூத்த வழக்கற்ஞர் அபிஷேக் மனு சிங்வி ராகுல் காந்தி சார்பாக வாதிட்டார். அவர் பேசுகையில், 'குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தி பேச ராகுல் காந்தி எண்ணவில்லை. அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டது கடத்தல், கொலை போன்ற கடுமையான வழக்குகள் அல்ல. ஜாமின் பெறக்கூடிய ஒரு சாதாரண அவதூறு வழக்கு தான். ஆனால், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால், 8 ஆண்டுகளுக்கு மக்கள் பிரதிநிதித்துவம் பெற முடியாத நிலை உருவாகிவிடும். இந்த வழக்கிற்கு இவ்வளவு பெரிய தண்டனை தேவையற்றது. எனவே ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும்” என வாதிட்டார்.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் வாதிட்டனர். இதனைத் தொடர்ந்து தீர்ப்பு கூறிய நீதிபதிகள், ”ராகுல் காந்தி வழக்கில் அதிகபட்ச தண்டனையாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது ஏன்? இதன் மூலம் தொகுதியின் பிரதிநிதித்துவம் என்பதே இல்லாமல் போய்விட்டது. அதிகபட்ச தண்டனை தந்தது ஏன் என்பது பற்றி தீர்ப்பளித்த நீதிபதி காரணத்தை கூறவில்லை. தொகுதியின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் அளவுக்கு இந்த அவதூறு வழக்கு பொருத்தமான காரணமா? ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக மனுதாரர்கள் விளக்கம் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளனர்.