சென்னையில் 2,106 தெருக்களில் கழிவுநீர் குழாய் தூர்வாரும் பணி இன்று தொடங்குகிறது.
இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு வாரியம் சார்பில் சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் களப் பணிகளை கண்காணிக்க செயற்பொறியாளர்கள் நிலையில், மண்டலத்துக்கு ஒருவர் வீதம் 15 மண்டலங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் அனைத்து மண்டலங்களிலும் உள்ள கழிவுநீர் செல்லும் குழாய்களில் தூர்வாரும் பணிகள் இன்று(நவ.1) தொடங்கப்படுகிறது.
இப்பணிகள் வரும் 15-ம் தேதி வரை நடைபெறும். மொத்தம் 2,106 தெருக்களில் உள்ள 11,260 இயந்திர நுழைவு வாயில்கள் வழியாக கசடுகள் அகற்றப்பட உள்ளன. இப்பணியில் 282 தூர்வாரும் இயந்திரங்கள், 162 ஜெட்ராடிங் இயந்திரங்கள், 57 கழிவுநீர் உறிஞ்சும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.