திருமங்கலம்-மதுரை இடையே இரண்டாவது அகல ரயில்பாதை பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து தூத்துக்குடி மற்றும் மதுரை-நாகர்கோவில் இரண்டாவது அகல ரயில்பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மதுரையிலிருந்து தூத்துக்குடி இரண்டாவது அகல ரயில்பாதையில் திருமங்கலத்திலிருந்து வாஞ்சிமணியாட்சி, தூத்துக்குடி வரையில் பணிகள் முடிவடைந்துள்ளன. இதே போல் மதுரை - நாகர்கோவில் வழித்தடத்தில் நெல்லை-நாகர்கோவில் இடையே இரண்டாவது அகல ரயில்பாதை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் பேனல் ரயில் டிப்போ அரக்கோணத்தில் உள்ளதால் அங்கிருந்து ஒரு பேனல் ரயில் வரவழைக்கப்பட்டு அதன்மூலமாக நீளமான உறுதித்தன்மையான தண்டவாளங்கள் இறக்கப்பட்டு திருமங்கலம்-மதுரை இடையே தண்டவாள பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருமங்கலம்-மதுரை இரண்டாவது அகல ரயில்பாதை பணிகள் விரைவில் முடிவடைந்துவிட்டால் மதுரையிலிருந்து தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு கூடுதலாக ரயில்கள் இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.