தமிழகத்தில் உயிரியல் பூங்கா நிர்வாகத்திற்கும், அதன் வளர்ச்சி பணிகளுக்காகவும் நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, சேலம் குரும்பபட்டி உயிரியல் பூங்கா, வேலூர் அமிர்தி உயிரியல் பூங்கா ஆகிய பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் தற்போது கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. இதில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நுழைவு கட்டணம் இலவசம். 5 முதல் 17 வயது வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மற்றும் அவருடன் வரும் ஆசிரியர்களுக்கும் சலுகை கட்டணமாக ரூபாய் 20 வசூலிக்கப்படுகிறது. வண்டலூர் பூங்காவில் பெரியவர்கள் நுழைவு கட்டணம் ரூபாய் 200 ஆகவும், பேட்டரி வாகன கட்டணம் 150 ஆகவும், அதேபோல் வீடியோ கேமரா ஒளிப்பதிவு கட்டணம் ரூபாய் 750 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சக்கர நாற்காலிக்கான கட்டணம் ரத்து செய்யப்பட்டு, வாகன கட்டணங்கள் மணிக்கணக்கில் இருந்து நாள் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது.
அதேபோல் கிண்டி சிறுவர் பூங்காவில் நுழைவு கட்டணம் பெரியவர்களுக்கு ரூபாய் 60 ஆகவும், 5 முதல் 12 வயது உள்ள சிறுவர்களுக்கு ரூபாய் 10 ஆகவும், வீடியோ கேமராவிற்கு ரூபாய் 200 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேலம் குரும்பபட்டி உயிரியல் பூங்காவில் பெரியவர்களின் நுழைவு கட்டணம் ரூபாய் 50 ஆகவும், 5 முதல் 12 வயது சிறுவர்களுக்கு ரூபாய் 10 ஆகவும், வீடியோ கேமரா பதிவிற்கு ரூபாய் 150 ஆக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் அமிர்தி பூங்காவில் ரூபாய் 30 பெரியவர்களுக்கும், 5 முதல் 12 சிறுவர்களுக்கு ரூபாய் 10 ஆகவும் வசூலிக்கப்படுகிறது.