தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்ததன் காரணமாக, பள்ளிகள் திறப்பு ஜூன் 1ம் தேதியில் இருந்து 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், வெயிலின் தாக்கம் குறையாமல், தொடர்ந்து நீடித்து வருவதால், பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12-ம் தேதியும், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. தமிழகத்தில் இயங்கி வரும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்கும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். கூட்டம் முடிந்து, அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. வானிலை மையத்தின் தரவுகள், சமூக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பள்ளி திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.