இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு இடையில் நடைபெறும் வர்த்தகத்தை, அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்திய ரூபாய் அல்லது அமீரகத்தின் திர்ஹாம் நாணயங்களில் மேற்கொள்ள ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அமீரக பயணத்தில் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரக தூதர் அப்துல் நாசர், “இருதரப்பு பொருளாதாரம் மிகுந்த வளர்ச்சி அடையும் நோக்கில், ரூபாய் - திர்ஹாம் வர்த்தக ஒப்பந்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனை மற்றும் அமீரகத்தின் ஐபிபி பரிவர்த்தனை நடைமுறைகளை இணைக்கும் முயற்சிகள் தொடங்கப்பட உள்ளன” என்று கூறியுள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிட்டத்தட்ட 18 உலக நாடுகள் இந்திய ரூபாய் அடிப்படையிலான வர்த்தகத்தை மேற்கொண்டு வருகின்றன. மேலும் 35 உலக நாடுகள் இந்திய ரூபாய் வர்த்தகத்தை மேற்கொள்ள முன்வந்துள்ளன. மேலும், அமீரகம் உடனான இந்தியாவின் கூட்டணி மூலம், ஹவாலா நடைமுறை பெருமளவு கட்டுப்படுத்தப்படுகிறது. அத்துடன், தீவிரவாத அமைப்புகளின் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன” என்று கூறப்பட்டுள்ளது.