தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற் சங்கத்தினர் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இவர்களின் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
பின்னர் நடைபெற்ற விசாரணையின் முடிவில் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதின் பெயரில் வேலை நிறுத்தத்தை கைவிடுவதாக தொழிற்சங்கங்கள் கூறியுள்ளனர். நாளை மீண்டும் அவர்கள் பணிக்கு திரும்ப உள்ளனர். நிலுவைத் தொகை முழுமையாக வழங்கப்படாவிட்டால் மீண்டும் வேலை நிறுத்தம் தொடரும் என்று கூறியுள்ளனர். இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எதுவும் எடுக்கக் கூடாது என்று உயர் நீதிமன்றம் அரசுக்கு வலியுறுத்தி இருக்கிறது. அதோடு பண்டிகை காலத்தில் போராட்டம் நடத்துவது மக்களை பிணை கைதிகளாக வைத்து போராடுவது போல் உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவை முழுமையாக படித்தபின் முதல்வரின் ஆலோசனை பெற்று ஜனவரி 19ஆம் தேதி பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெறும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.