சக்தி வாய்ந்த 'ஹின்னம்னார்' சூறாவளி தென் கொரியாவில் நேற்று கரையை கடந்தது.
கிழக்காசிய நாடான தென் கொரிய கடற்பகுதியில், 'ஹின்னம்னார்' என்ற சூறாவளி மையம் கொண்டது. இது அந்நாடு இதுவரை கண்டிராத சக்தி வாய்ந்த சூறாவளியாக உருவானது. இந் நிலையில் அது நேற்று சுற்றுலா தலமான ஜெஜு தீவு - துறைமுக நகரான புசான் இடையே கரையை கடந்தது.
அப்போது 133 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசியது. அதன் பின் கொரிய தீபகற்பம் - ஜப்பான் கடற்பகுதி நோக்கி சூறாவளி நகர்ந்தது. இது வரும் வாரங்களில் கிழக்கு சீன பகுதியை தாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.சூறாவளி கரையை கடக்கும் போது, தென் கொரியா முழுதும் கனமழை பெய்தது. அப்போது, 3 அடி உயரத்துக்கு மழை நீர் தேங்கும் அளவுக்கு கனமழை பெய்தது. இதனால் சாலைகள் பெரும் சேதம் அடைந்து 66 ஆயிரம் வீடுகள் இருளில் மூழ்கின. ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
'இது, தென் கொரியா இதுவரை கண்டிராத சக்தி வாய்ந்த சூறாவளி' என அந்நாட்டு பிரதமர் ஹான் டக்சூ தெரிவித்தார். மேலும் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். இந்த சூறாவளியில் சிக்கி, 70 வயது பெண் மற்றும் 25 வயது இளைஞர் உட்பட மூவர் உயிரிழந்தனர்.