திபெத் நாட்டின் ஆன்மீக தலைவர் தலாய் லாமாவை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சீனாவின் எச்சரிக்கையையும் மீறி இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தரம்சாலாவில் தங்கியிருக்கும் தலாய்லாமாவை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர் இன்று சந்தித்தனர். திபெத் சீனா பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கில் அமெரிக்காவின் தலையீடு இருக்கும் என்பதை உறுதி செய்யும் விதமாக இந்த சந்திப்பு அமைந்துள்ளது. இது தொடர்பாக சீனாவுக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் மசோதா இயற்றப்பட்டுள்ளது. அதிபர் ஜோ பிடன் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் மசோதா ஏற்றுக் கொள்ளப்படும். இந்த மசோதாவில் கையெழுத்திட கூடாது என சீனா வலியுறுத்தி உள்ளது. இதற்கிடையே, முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. வரும் வாரத்தில், மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் தலாய்லாமா ஜோ பிடனை நேரில் சந்தித்து இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தலாம் என கருதப்படுகிறது.