சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுல்தான் அல் நயாடி என்ற ஐக்கிய அரபு அமீரக விண்வெளி வீரர் தங்கி உள்ளார். விண்வெளி நடைபயணத்தில் ஈடுபட்ட முதல் அரபு விண்வெளி வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து எடுக்கப்பட்ட மெக்கா நகரின் புகைப்படத்தை பக்ரீத் தினமான நேற்று அவர் வெளியிட்டுள்ளார். ட்விட்டரில் வெளியிடப்பட்ட இந்த புகைப்படம் 1.5 லட்சத்திற்கும் அதிகமாக பார்க்கப்பட்டுள்ளது.
பக்ரீத் தினமான நேற்று, லட்சக்கணக்கான யாத்திரிகள் மெக்கா நகரம் அருகே உள்ள அராபத் மலை சிகரத்தில் திரண்டிருந்தனர். இந்த ஹஜ் யாத்திரை இஸ்லாமியர்களின் புனிதப் பயணமாக கருதப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக ஹஜ் யாத்திரையில் அதிகமான மக்கள் பங்கேற்காத நிலையில், இந்த வருடம் மீண்டும் சகஜ நிலை திரும்பி உள்ளது. இந்த நிலையில், விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட மெக்கா புகைப்படம் அதிகமானோரை கவர்ந்துள்ளது.