அயல்நாட்டில் வாழும் உக்ரைனியர்களுக்கு இரட்டை குடியுரிமை வசதி விரைவில் அளிக்கப்படும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உறுதி அளித்துள்ளார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தேசிய ஒற்றுமை தின நிகழ்ச்சியில் உரையாற்றினார். உக்ரைனில் அப்போது அவர் கூறியதாவது, உக்ரைன் - ரஷ்யா போரின் போது உக்ரேனுக்கு அயல் நாட்டில் வாழும் உக்ரைன் மக்கள் முழு ஆதரவு வழங்கினார்கள் அவர்களுக்கு நன்றி. அயல்நாட்டில் வசித்த உக்ரைனியர்கள் போரை அறிந்து நம் நாட்டில் போரிட வந்தவர்களுக்கும் நன்றி. நம் நாட்டில் இரட்டை குடியுரிமை முறை இல்லை. இதனால் அயல்நாடுகளில் வசிக்கும் உக்ரைன் நாட்டை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் உக்ரைன் பாஸ்போர்ட்டை வைத்துக் கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். உக்ரைன் பாராளுமன்றத்தில் ஒரு புதிய சட்ட வரைவு தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் அயல்நாட்டில் வசிக்கும் நம் நாட்டினருக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அந்நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தின்படி பாராளுமன்ற ஒப்புதல் கிடைத்த பின்பு இந்த வரைவு சட்டமாக ஒரு ஆண்டு காலம் ஆகும். ரஷ்ய தாக்குதல் குறித்த செய்தி அறிந்து அயல்நாடுகளில் வாழ்ந்த வந்த ஆயிரக்கணக்கான உக்ரைனியர்கள் போரிட உடனடியாக உக்ரைனுக்கு திரும்பி வந்தனர். அவர்களில் பலர் தங்களை ராணுவத்தில் இணைத்துக் கொண்டனர். சிலர் உக்ரைன் குடியுரிமையை விட்டுவிட்டனர். எனவே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்த முடிவை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.