அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 20% மாணவர்களை கூடுதலாக சேர்க்க உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கிராமங்கள், நகராட்சிகள் மற்றும் பிற்படுத்தபட்ட, பழங்குடியின மாணவ, மாணவிகள் அரசு கல்லூரிகளில் சேர அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர். அதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரித்து உயர்கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது.
அதில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் 20% வரையிலும், அரசு உதவி பெறும் கல்லூரிகள் 15% வரையிலும், தனியார் கல்லூரிகள் 10% வரையிலும் மாணவர்களை கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அது சார்ந்த பல்கலைகழகங்களின் அனுமதி பெற வேண்டும். கூடுதல் சேர்க்கைக்காக கூடுதல் பணியிடங்கள் கோரக்கூடாது எனவும் , பல்கலைக்கழகங்களின் ஒப்புதல் பெற்று சேர்க்கையை நடத்த வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்துள்ளது என்று ஆணையில் கூறப்பட்டுள்ளது.