இனி, யுபிஐ மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தினசரி பரிவர்த்தனை வரம்பு ₹10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
யுபிஐ (UPI) வழியாக மேற்கொள்ளப்படும் தினசரி பரிவர்த்தனைக்கான வரம்பை இந்திய தேசிய பணப்பட்டுவாடா கழகம் (NPCI) உயர்த்தியுள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி, சில குறிப்பிட்ட பயன்பாடுகளுக்கான வரம்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விதிகளின்படி, பங்குச்சந்தை முதலீடு, காப்பீட்டு பிரீமியம், கடன் மற்றும் கடன் தவணை, மற்றும் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகைகளுக்கான பரிவர்த்தனை வரம்பு ₹2 லட்சத்தில் இருந்து ₹10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையைச் செலுத்துவதற்கான வரம்பு ₹2 லட்சத்திலிருந்து ₹6 லட்சமாகவும், நகை வாங்குவதற்கான வரம்பு ₹1 லட்சத்திலிருந்து ₹6 லட்சமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தனிநபர் கணக்குகளுக்கு இடையேயான பரிவர்த்தனை வரம்பு, ஏற்கனவே உள்ள ₹1 லட்சமாகவே தொடர்கிறது. அதேபோல், கல்வி கட்டணம், மருத்துவ கட்டணம், மற்றும் முதல் பங்கு வெளியீடு (IPO) போன்றவற்றுக்கான வரம்பு ₹5 லட்சமாகவே நீடிக்கிறது. இந்த மாற்றங்கள் வணிகப் பரிவர்த்தனைகளை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.