நியூயார்க் - டெல்லி ஏர் இந்தியா விமானத்தில், கடந்த நவம்பர் 27ஆம் தேதி பயணி ஒருவர், சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் கடந்த ஜனவரி 4ம் தேதி வெளிச்சத்திற்கு வந்தது. இது தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர், டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரனுக்கு எழுதிய புகாரில், அவரது உடைகள், காலணிகள் மற்றும் பயண பெட்டிகள் அனைத்தும் சிறுநீரால் நனைந்ததாகவும், இதற்கு விமான பணியாளர்கள் எந்தவித உதவிகளும் செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பெரும் பேசு பொருளான இந்த விவகாரத்தில், வாட்ச் டாக் மற்றும் இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவை தலையிட்டுள்ளன. டிஜிசிஏ, 30 லட்சம் ரூபாயும், வாட்ச் டாக் 3 லட்சம் ரூபாயும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளன. அத்துடன், குறிப்பிட்ட அந்த விமானத்தை இயக்கிய விமானியின் உரிமம் ரத்து செய்யப்படுவதாகவும் டிஜிசிஏ தெரிவித்துள்ளது. இந்நிலையில், சிறுநீர் கழித்ததாக கூறப்படும் ஷங்கர் மிஸ்ரா என்ற நபர், டெல்லி காவல்துறையினரால் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.